கொட மொளகா நிழலில்...கலர்கலர்...பருப்பு உசிலி
பருப்பு உசிலி...........ப்ரோட்டீன் சத்து நிரம்பியது. எந்த காயோடும், குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், காராமணி போன்றவை இதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் குடைமிளகாய்?
புது உறவு உண்டாக்கிப் பார்த்தாலென்ன? 'ச்செய்யூ!' என்றது உள்ளிருந்து ஒரு குரல்.முதலில் பருப்பு உசிலி சுலபமாக, அதிகம் எண்ணெய் பிடிக்காமல் தயாரிப்பது எப்படி? அதையும் கண்டுகொண்டேன்..நான் கண்டுகொண்டேன்!!
பாசிப்பருப்பை, தேவையான அளவு ஊற வைத்துக்கொண்டு, அது ஊறியதும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்...காரத்துக்கேற்ப, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.அரைத்த விழுதை ஓர் அகலமான தட்டில் பரப்பி குக்கரில் ஒரு விசிலுக்கு வேக வைக்கவும். இன்னும் சுலபமாக வேண்டுமென்றால் ஓர் அகலமான மைக்ரோவேவ் பாத்திரத்தில் பரப்பி மைக்ரோவேவ் அவனில்
மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு வேக விடவும். ஏதோ ஒரு மாதிரியில் வெந்த பருப்பை கத்தியால் சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் ரெண்டு சுத்து சுத்தி உதிர உதிர எடுத்துக்கொள்ளவும். சுலபமாக உசிலி தயார்!!!!
இப்போது கலர் காப்சிகம்...சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய மூன்று வண்ண குடமிளகாய்களை
சின்னச்சின்ன க்யூப்களாக நறுக்கிக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய குடமிளகாய்களை சேர்த்து சிறிது வதக்கவும். மிளகாய்கள் அதிகம் வேக வேண்டுமென்பதில்லை. லேசாக வதக்கினாலே போதுமானது. நன்கு வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள பருப்பு உசிலியை அதோடு கலந்து சிறிது நேரம் பிரட்டவும். பின் நறுக்கிய பச்சை கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து, கண்களுக்கு குளிர்ச்சியாக வண்ணமயமான குடமிளகாய் பருப்பு உசிலையை வழக்கமான வசனங்களோடு, 'இதை பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்!!' என்று சொல்லி சூடாகப் பரிமாறவும்.இந்த பருப்பு உசிலி, நான் 'மங்கயர் உலகம்' என்று காலை ஏழு மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்களே? அதில் பார்த்து செய்தது. அதைப் பார்க்காதவர்களுக்காக இங்கு பரிமாறுகிறேன். சேரியா....?














